
கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் இறப்பிற்குப் பிறகு போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கார்டினல்கள் ஒன்று சேர்ந்து போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்காக வாடிகனில் உள்ள சிற்றாலயத்தில் பாரம்பரிய முறைப்படி வாக்கெடுப்புகளை நடத்தினர்.
அந்த வாக்கெடுப்பின் முடிவில் 140 கோடி கத்தோலிக்கர்களின் தலைவராக 267வது போப் ஆண்டவராக வட அமெரிக்காவை சேர்ந்த கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். அவரை போப் 14ஆம் லியோ என கார்டினல்கள் அறிவித்தனர்.
இதனை அடுத்து புதிய போப் லியோவுக்கு உலக தலைவர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்துபவராக தேர்வு செய்யப்பட்டுள்ள போப் 14ஆம் லியோ அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவரது அமைதி மற்றும் ஒற்றுமையின் செய்தி உலகம் முழுவதும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கட்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் போப் லியோ 14 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது கடந்த 2006 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் நடைபெற்ற ஆசிய பசிபிக் புனித அகஸ்டின் சபை கூட்டத்தில் பங்கேற்க வந்த, பாதிரியார் ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் கோயம்புத்தூரில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் செண்பகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்துள்ளார்.
இந்திய அகஸ்தீனிய சபையின் பிராந்திய தலைவரான பாதிரியார் வில்சன் போப் லியோ தமிழகத்திற்கு வருகை தந்த நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டதை அடுத்து இத்தகவல் வெளிவந்துள்ளது. அந்தப் பதிவில், போப் லியோ பொள்ளாச்சி அருகே ஊத்துக்குளியில் உள்ள புனித மோனிகா சமூக மடத்திற்கு வந்து கூட்டு பிரார்த்தனை நடத்தியுள்ளார்.
மேலும் அங்கு உள்ள மாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும் கலந்து பேசினார். அவர் மிகவும் அன்பான மற்றும் பணிவான மனிதர் அவரது வருகையின் போது மாணவர்களுக்கு மிகுந்த ஊக்கம் அளித்தார் என்றும் பாதிரியார் வில்சன் தெரிவித்துள்ளார்.