நாமக்கல்லில் கிழக்கு மாவட்டத்தில் பாஜக தலைவர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி ராமலிங்கம் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, மத்திய நிதிநிலை அறிக்கை எதிர்கால வளர்ச்சியை நோக்கி தயாரிக்கப்பட்டதாகும். இதனை நாட்டின் மீது அக்கறை உள்ளவர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

ஆனால் பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரை கூட சொல்லவில்லை என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். இது அறிக்கை அல்ல, வரயிருக்கும் தேர்தலுக்கான கட்சி அறிக்கை, கடந்த தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்யவில்லை என்றால் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை, புறக்கணித்து விட்டது என்று சொல்வதற்காக முன்கூட்டியே தயார் செய்த அறிக்கையாகும்.

பெரியார் எங்கள் தலைவருக்கெல்லாம் தலைவர் என்று முதல்வர் கூறுகிறார். ஆனால் கடந்த 1967ம் ஆண்டு பெரியார், திமுக ஆட்சிக்கு வரக்கூடாது, அப்படி வந்தால் தமிழகம் நாசமாகிவிடும் என்றார். அந்த கட்சி ஆட்சிக்கு வருவதற்கு காரணம் ராஜாஜி தான், அவர் ஆரம்பித்த சுகந்திரா கட்சி தான் காரணம். பெரியார் காரணம் இல்லை. இந்த பூமி தேசியத்தையும், தெய்வீகத்தையும் அடிப்படையாகக் கொண்ட பூமி ஆகும்.

ஆனால் இவற்றை திராவிடம் என்ற போர்வை போட்டு மறைக்க பார்க்கின்றனர். எனவே தமிழக முதல்வர் எடுக்கும் ஆயுதம் ஒருபோதும் பலிக்காது. திமுகவுக்கு எதிராக இருக்கும் அனைத்து கட்சிகளும் கருத்து வேறுபாடு இல்லாமல் ஒன்றிணைய வேண்டும். திமுக தவறான அரசாங்கம், இதை வழிநடத்தும் தலைவர்களும் தவறானவர்கள். எனவே இந்த அரசை தூக்கி எறிய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு திமுகவுக்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறினார்.