
பாகிஸ்தான் தற்போதைய நிலையில் கடனில் சிக்கித் தவித்து வருகிறது. அந்த நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையின்படி, வரலாற்றிலேயே காணாத அளவுக்கு மொத்த தேசியக் கடன் ரூ.76,00,700 கோடி பாகிஸ்தான் ரூபாயை எட்டியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இந்தக் கடன் இரட்டிப்பு அளவில் அதிகரித்துள்ள நிலையில், இந்த நிலைமை நாட்டின் நிதி நிலையைப் பேரழிவின் பாதையில் கொண்டு செல்கிறது.
2025 நிதியாண்டில் பாகிஸ்தானின் பொருளாதாரம் 2.7% வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் அரசாங்கம் 3.6% வளர்ச்சியை இலக்காகக் கொண்டிருந்தாலும், பின்னர் அதை 2.7% என குறைத்துள்ளது. வரவிருக்கும் ஆண்டுகளில் 4.2% வளர்ச்சி இலக்கை நோக்கி நாட்டை எடுத்துச் செல்லும் முயற்சியில் பாகிஸ்தான் இருக்கிறது என பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாகவும் அந்த வளர்ச்சி மிகவும் குறைவாகவே இருப்பது கவலைக்கிடமானது.
இந்த கடன் சுமையை காரணமாகக் கொண்டு பாகிஸ்தான் சர்வதேச அமைப்புகள் மற்றும் நட்பு நாடுகளிடமிருந்து நிவாரணங்களை கோருகிறது. “நாங்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும் பணம் கேட்போம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்” என பிரதமர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தக் கடன்கள் பயனுள்ள திட்டங்களில் பயன்படுத்தப்படாமல், பயங்கரவாத நடவடிக்கைகளில் செலவழிக்கப்படுவதாகவும், இந்தியா இது குறித்து ஐ.எம்.எப் மற்றும் உலக வங்கியில் புகார் தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக வங்கியின் கணக்குப்படி, பாகிஸ்தானில் 45% மக்கள் வறுமை நிலையில் உள்ளனர். இதில் 16.5% மக்கள் தீவிர வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கிறார்கள். இதனிடையே இந்தியா தனது மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்துள்ளது எனக் கூறப்படுகிறது. பாகிஸ்தானின் தற்போதைய நிதிநிலை மற்றும் வளர்ச்சி தரம் குறித்து உலக நாடுகள் தீவிர கவனம் செலுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது.