பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், ஜூன் 12ஆம் தேதி அதாவது இன்று அமெரிக்கா செல்ல உள்ளதாக பாகிஸ்தான் தூதரகம் அறிவித்துள்ளது. அமெரிக்க ராணுவ தினமான ஜூன் 14 ஆம் தேதி நடைபெறும் விழாவில் பங்கேற்க அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பயணம், சமீபத்தில் இந்தியாவுடனான பதற்றத்தை உருவாக்கிய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிந்தைய காலகட்டத்தில் நடைபெறுவதால், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அசிம் முனீர், அமெரிக்க உயர்மட்ட ராணுவ மற்றும் அரசியல் தலைவர்களை சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பில் இந்தியா, சீனா மற்றும் பயங்கரவாத பிரச்சனைகள் குறித்த விவாதங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. இந்தியாவுடனான பதற்றம் குறைவதற்கும், பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்தவும் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, ஜெனரல் முனீர், டிரம்ப் நிர்வாகத்துடனான உறவை வலுப்படுத்த, பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டுகளை பரிசாக அளிக்க திட்டமிட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு இரண்டு முக்கிய சலுகைகளை முன்வைக்கிறது. ஒன்று, 1970களில் நிக்சன் ஆட்சிக்காலத்தில் போலி தோழமையை உருவாக்கிய பாகிஸ்தான், மீண்டும் அமெரிக்காவை சீனாவுக்கு எதிரான இணைப்பாக உருவாக்க முயல்கிறது.

இரண்டாவது, பாகிஸ்தானில் உள்ள ரெக்கோ டிக் தங்கம் மற்றும் செம்பு சுரங்கங்கள், மேலும் அரிய மண் தாதுக்களையும் அமெரிக்காவிடம் ஒப்படைக்க முனைந்துள்ளது. இதன் மூலம், அமெரிக்க முதலீடுகளை ஈர்க்கும் திட்டத்தை ஜெனரல் முனீர் மேற்கொள்கிறார். இதை சீனா கடுமையாக எதிர்க்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பயணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, ஆப்கானிஸ்தானில் செயல்படும் டிடிபி  பயங்கரவாத அமைப்புகள் குறித்து அமெரிக்கா வழங்கும் உறுதிமொழி. அத்துடன், கிளர்ச்சியை கட்டுப்படுத்த அமெரிக்க நிதி உதவியும் பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது. ஆனால் இந்தியா தெளிவாக அறிவித்திருப்பதாவது, எல்லை தாண்டும் பயங்கரவாதம் நிறைவடையாது வரை எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறாது.

CPEC திட்டம் வழியாக சீனாவுடன் பாகிஸ்தானின் நெருக்கம், அமெரிக்காவை இன்னும் எச்சரிக்கையுடன் பார்க்கச் செய்துள்ளது. அதே நேரத்தில், இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ஜெனரல் முனீரின் அமெரிக்கப் பயணத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.