கோயம்புத்தூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி பாப்பம்மாள். இவருக்கு மத்திய அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கிய நிலையில் இவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் செயற்கை உரங்கள் இல்லாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்து வந்தார். இவருக்கு 109 வயது ஆகும் நிலையில் நேற்று உடல் நலக்குறைவினால் காலமானார். இவருடைய மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியும் பாப்பம்மாள் பாட்டி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பாப்பம்மாள் மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாக இருக்கிறது. விவசாயத்தில் குறிப்பாக இயற்கை விவசாயத்தில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். அவருடைய அடக்கம் மற்றும் கனிவான இயல்புக்காக மக்கள் அவரை நேசித்தனர். மேலும் என்னுடைய எண்ணங்கள் அவருடைய குடும்பத்தினருடன் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் ஒரு விழாவின் போது பிரதமர் நரேந்திர மோடி பாப்பம்மாள் காலில் விழுந்த ஆசீர்வாதம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.