
உத்திர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வள மேம்பாட்டு துறை செயல்பாடு குறித்த ஆலோசனை நடத்தினார்.
அந்தக் கூட்டத்தில் பசு பாதுகாப்பு மையங்கள் தன்னிறைவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. அதன்படி முதல் நடவடிக்கையாக மாட்டுச் சாணம் மூலம் இயற்கை சார்ந்த பெயிண்டுகள் அரசு கட்டிடங்களில் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், அதன் மூலம் மிகப்பெரிய அளவிலான உற்பத்தி நடைபெற வேண்டும் எனவும் முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதுகுறித்து உத்திரபிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்ததாவது, “மாட்டுச் சாணம்தான் பாஜக அரசின் மிகப்பெரிய புதிய சாதனை” என விமர்சித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக செய்தி தொடர்பாளர் கூறியதாவது, “அகிலேஷ் யாதவ் மாட்டுச்சாணம் மற்றும் கால்நடைகளை வெறுக்கிறார். மேலும் ஆஸ்திரேலியா சென்ற பிறகு அவர் இந்திய கலாச்சாரம் மற்றும் மரபுகளை மறந்து விட்டாரா? அல்லது அரசியலுக்காக பசு, கங்கை மற்றும் கீதையை அவமதிக்கிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.