
இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் தங்களது ஏடிஎம் எந்திரங்களில் ரூபாய் 500 நோட்டுகளை மட்டும் வைக்கின்றது. இதனால் சாமானிய மக்கள் ஏடிஎம் எந்திரங்களில் பணம் எடுக்க முடிவதில்லை.
அதாவது சாமானிய மக்கள் வங்கி கணக்கில் இருக்கும் சிறிய தொகையை எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இது சம்பந்தமாக ரிசர்வ் வங்கிக்கு அதிக அளவில் புகார்கள் சென்றுள்ளது. அதனால் ரிசர்வ் வங்கி அந்த புகார்களை பரிசீலனை செய்து அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் அனைத்து வங்கிகளும் தங்களது ஏடிஎம் எந்திரங்களில் ரூ.100 மற்றும் ரூ. 200 மதிப்புள்ள நோட்டுகளை கட்டாயமாக வைக்க வேண்டும்.
அதாவது ஏடிஎம் ஆப்ரேட்டர்கள் அனைத்து ஏடிஎம்களிலும் 75% குறைந்தது ஒரு கேசட்டில் ரூ. 100 அல்லது ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை கட்டாயம் விநியோகிக்குமாறு அமைக்க வேண்டும்.
இதனை அடுத்து அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து ஏடிஎம்களிலும் 90% குறைந்தது ஒரு கேசட்டிலிருந்து ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள நோட்டுகள் விநியோகிக்குமாறு அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
தற்போது இந்தியாவில் செயல்பட்டு வரும் ஏடிஎம்களில் 4 வித நோட்டுகளை வைக்கும் அளவுக்கு கேசட்டுகள் உள்ளன. இருப்பினும் அனைத்திலும் ரூபாய் 500 நோட்டுகள் மட்டுமே வைக்கப்படுகின்றன. இதனை முற்றிலும் தடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கி இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.