
உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிரிஷ்டி துலி(25) என்பவர் ஏர் இந்திய நிறுவனத்தில் விமானியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மராட்டிய மாநிலம் மும்பையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். டெல்லியில் விமானியாக பயிற்சி பெற்றபோது ஆதித்யா பண்டிட் என்பவருடன் சிரிஷ்டி துலிக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. நேற்று முன்தினம் சிரிஷ்டி துலி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆதித்யா சிரிஷ்டியை அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது. மேலும் தனது காதலியை அசைவ உணவு சாப்பிட கூடாது எனக் கூறி கட்டாயப்படுத்தியதாகவும் இளம்பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி ஆதித்யாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.