தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் எஸ்.ஏ சந்திரசேகர். இவர் தற்போது தங்கர்பச்சான் இயக்கியுள்ள கருமேகங்கள் களைகிறது என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் எஸ்ஏ சந்திரசேகர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நான் முதன்முதலாக இயக்குனராக வேண்டும் என ஆசைப்பட்டு சென்னைக்கு வந்தேன். அப்போது இயக்குனர் பாரதிராஜாவிடம் சென்று உங்களிடம் நான் உதவி இயக்குனராக பணிபுரியலாமா என்று கேட்டேன்.

அதற்கு அவர் நண்பர்களாக இருக்கலாம் என்று கூறிவிட்டார். எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு தான் இயக்குனராக மாறினேன். இதேபோன்று விஜய் நடிகராக வேண்டும் என்ற ஆசையுடன் அவர் ஆல்பத்தோடு இயக்குனர் பாரதிராஜாவிடம் சென்றேன். அவர் அப்போதும் வாய்ப்பு கொடுக்கவில்லை. நான் பல பெரிய இயக்குனர்களிடம் விஜயின் ஆல்பத்தோடு சென்று வாய்ப்பு கேட்டுள்ளேன். நான் கௌதம் வாசுதேவ் மேனனிடம் கூட விஜயை வைத்து படம் பண்ணுங்கள் என்று கேட்டிருக்கிறேன். ஆனால் அவரும் அப்போது முடியாது என்று சொல்லிவிட்டார். இதனையடுத்து தான் நானே விஜயை இயக்கினேன். அவர்கள் அனைவரும் மறுத்ததும் ஒரு வகையில் நல்லது தான். ஏனெனில் என்னுடைய இயக்கத்தில் நடித்ததால் தான் விஜய் இன்று கமர்சியல் ஹீரோவாக மாறியுள்ளார் என்று கூறினார்.