கிராம உதவியாளர்களை தேர்வு செய்ய தமிழக அரசு புதிய விதிமுறையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை செயலாளர் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது, கிராம உதவியாளர் வேலைக்கான சிறப்பு விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருவாய் துறை செயலாளரின் கருத்துருவை பரிசீலித்த தமிழக அரசு கிராம உதவியாளர் பணி நியமனத்துக்கான தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக வழிமுறைகளை வகுத்துள்ளது.

அதன்படி கல்வித் தகுதியில் SSLC-யில் தமிழ் ஒரு பாடமாக கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும். அதற்கான மதிப்பெண் பட்டியலை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். விண்ணப்பம் செய்பவர்கள் SSLC-யில் தேர்வு பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும் முழு மதிப்பெண் வழங்கப்படும்.

இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருந்தால் அதற்கு தேர்வு தேவையில்லை. மிதிவண்டி அல்லது மோட்டார் வாகனம் ஓட்டும் திறன் இருந்தால் தேர்வு நடத்தப்படும். இதற்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். தமிழ் வாசிக்கும் எழுதும் திறன் இருந்தால் திறனுக்கு ஏற்ப 30 மதிப்பெண்கள் வரை வழங்கப்படும். நேர்காணல் குழுவின் முன் வாசித்து, எழுதி காட்ட வேண்டும்.

நேர்காணல் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், பிற தனி வட்டாட்சியர் ஆகியோர் கொண்ட குழுவினரால் நடத்தப்படும். இதற்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரரின் ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கு ஏற்ப குறைந்தபட்சம் 6 அதிகபட்சம் 12 மதிப்பெண்கள் வரை வழங்கப்பட உள்ளது.

கிராம உதவியாளர் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் முறையாக உரிம விதிகள் படி வெளியிடப்படுவதை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிட வேண்டும். தேர்வு முறை உரிய விதிகளின்படி நடைபெற்று உள்ளதா என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்த பின்பே தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். இதனை மீறினால் அனைத்து அலுவலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.