நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து கடந்த 1999-ஆம் ஆண்டு இந்தியா ஏர்லைன்ஸ் விமானம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. அப்போது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானின் காந்தகார் விமான நிலையத்திற்கு இந்தியா ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்தி சென்றனர். அங்கு விமான பயணிகளை பிணை கைதிகளாக வைத்து இந்திய சிறையில் இருக்கும் மசூத் அசார் உள்ளிட்ட மூன்று பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என பயங்கரவாதிகள் நிபந்தனை வைத்தனர். அதனை ஏற்று அரசு அவர்களை விடுவித்து விமான பயணிகளை மீட்டது. இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஐசி 814 என்ற வெப் சீரிஸ் உருவாக்கப்பட்டது.

அதில் அரவிந்த்சாமி, விஜய் வர்மா, நஸ்ருதீன், அனுபம் திரிபாதி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்தனர். அனுபவ் சின்ஹா அந்த சீரிஸை இயக்கினார். அந்த படத்தில் இடம் பெற்ற கேரக்டர்களுக்கு இந்துக்களின் பெயர் வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். போலி பெயர்களுடன் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது. இதனால் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் ஐசி 814 வெப் சீரிஸ் குறித்து விளக்கம் அளிக்க நெட்பிளிக்ஸ் இந்திய தலைமை நிர்வாகிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நேற்று நெட்பிளிக்ஸ் நிர்வாகி மத்திய செய்தி ஒளிபரப்பு அமைச்சக அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.