
நெல்லை மாவட்டத்தில் உள்ள தாழையூத்து பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவரின் புத்தகப்பையை சோதனையிட்ட போது அதில் அரிவாள் இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் அரிவாளை பறிமுதல் செய்து விசாரித்துள்ளனர். அப்போது அந்த மாணவன் எனக்கும் அதே பள்ளியில் படிக்கும் சக மாணவனுக்கும் சண்டை ஏற்பட்டது அதனால் அந்த மாணவனை மிரட்டுவதற்காக அரிவாளை எடுத்து வந்தேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆசிரியர்கள் தாழையூத்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த தாழையுத்து காவல்துறையினர் மாணவரிடம் விசாரித்ததில் அரிவாள் எடுத்து வந்த மாணவன் உட்பட 3 மாணவர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதாக தெரியவந்தது.
அந்த மாணவர்களை காவல்துறையினர் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இவ்வாறு படிக்கும் மாணவன் பள்ளிக்கு அரிவாள் எடுத்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.