
சென்னை பெரம்பூர் மதுரை சாமி மடம் தெருவை சேர்ந்த வெங்கடசுவாமி(64) என்பவர், தனது எதிர் வீட்டில் வசிக்கும் துளசய்யா (53) குடும்பத்துடன் நட்பாக பழகி வந்தார். துளசய்யா, தனது மனைவியுடன் வெங்கடசுவாமி அடிக்கடி பேசி வருவதை சந்தேகப்பட்டு, மது அருந்திவிட்டு, தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ நாளில், வெங்கடசுவாமி தனது வீட்டின் அருகில் நின்றபோது துளசய்யா வந்து, “என் மனைவியுடன் ஏன் பேசுகிறாய்?” என கேள்வி எழுப்பினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், துளசய்யா திடீரென தனது உடலில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, வெங்கடசுவாமியை தாக்கி குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துவிட்டார்.
இதனால் வெங்கடசுவாமி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அவசர சிகிச்சை அளித்தும், அவரது உயிரைக் காப்பாற்ற முடியாமல், சிகிச்சை பலனின்றி வெங்கடசுவாமி உயிரிழந்தார்.
இந்த கொலை குறித்து வெங்கடசுவாமியின் மகன் திருமகேஷ் திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், தலைமறைவாக இருந்த துளசய்யாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.