
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூரில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. இதில் முருகன் திருவண்ணாமலை மாவட்டம் மாங்கால் சிப்காட் பகுதியில் இருக்கும் லோட்டஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். கடந்த மாதம் 27-ஆம் தேதி இரவு 11 மணிக்கு சாலையோரம் முருகன் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட முருகனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவருக்கும் கடந்த சில வருடங்களாக நிலப் பிரச்சனை காரணமாக தகராறு இருந்துள்ளது. விஜயனின் ஒன்பது வயது மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
தனது குடும்பம் நல்லா இருக்கக் கூடாது என்பதற்காக முருகன் தான் சூனியம் வைத்து தனது மகனை கொன்றதாக விஜயன் நினைத்துள்ளார். இதனால் பழிவாங்க நினைத்து முருகனை கூலிப்படை உதவியுடன் கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.