திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாமரைப்பாக்கம் பகுதியில் பிரசித்தி பெற்ற கங்கையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் கடந்த 3 ம் தேதி முதல் திருவிழா நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் 7 தலைமுறைகளாக இந்த திருக்கோவிலில் திருவிழா நடத்தி கங்கையம்மனை வழிபட்டு வருகின்றனர்.

இந்த திருவிழாவின் போது கங்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவதோடு மட்டுமல்லாமல், திருவிழாவில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன்படி கரகம் உடை களைந்து வேப்பிலை சாத்துதல், கூழ் வார்க்கும் நிகழ்ச்சி, கங்கை நீராடுதல், கரகம் ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து கங்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகளாக மாங்கல்ய பூஜை, பாலாபிஷேகம் வெங்கடேச பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் போன்றவையும் நடைபெற்றது. திருவிழாவில் நடைபெற்ற தீமிதி நிகழ்ச்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி பொங்கல் வைத்து வழிபட்டனர்.

அந்த திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் பின் தீபாராதனை முடிந்து தெருக்கூத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் இன்று காலை மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி, உடை களைதல் நிகழ்ச்சி, அம்மனுக்கு கும்பம் படைக்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது.