மகாராஷ்டிராவின் நாக்பூரில், உயர் கல்வி படித்த  ஒரு இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சந்திரபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷிஷ் ரெடிமல்லா என்ற இளைஞர், எம்.டெக் வரை படித்தவரும், முன்னதாக நாக்பூர் மற்றும் புனே போன்ற நகரங்களில் ஐடி நிறுவனங்களில் பணியாற்றியவரும் ஆவார். ஆனால் தவறான நண்பர்களின் கூட்டத்தில் சிக்கியதன் விளைவாக சூதாட்டத்தில் அடிமையானார். ஒரே நேரத்தில் ரூ. 23 லட்சம் இழந்த ஆஷிஷ், அந்த இழப்பை ஈடுசெய்ய திருட்டு தொழிலை தேர்வு செய்தார்.

தந்தோலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஷீத்தல் சிந்தல்வார் வீட்டில் நடந்த திருட்டு குறித்து விசாரித்த போலீசார், சிசிடிவி காட்சிகள் மற்றும் ஓவிய உதவியுடன் நபரை அடையாளம் கண்டு பிடித்தனர். விசாரணையில், அந்த நபர் ஆஷிஷ் என்பதும், நாக்பூரின் பல பகுதிகளில் ஆடம்பர வீடுகளில் திருட்டு செய்திருப்பதும் தெரியவந்தது. இது பற்றி காவல்துறையினர் தெரிவித்ததாவது, ஆஷிஷ் காலை நேர பேருந்தில் சந்திரபூரிலிருந்து நாக்பூருக்கு வந்து, மாலையில் வீடுகளை ஆய்வு செய்து, இரவில் திருட்டு செய்துவிட்டு, மறுநாள் காலை மீண்டும் பேருந்தில் திரும்புவதாகவும், இதுவரை ஐந்து இடங்களில் திருட்டு நடத்தியுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

தனது கல்வி, தொழில் அனுபவம் அனைத்தையும் புறக்கணித்து, திருட்டை ஒரு சாமர்த்தியமாக உருவாக்கிய ஆஷிஷ், வலிமையான பூட்டுகளையும் நொடிகளில் உடைக்கும் திறமை கொண்டவராகவும், முன்னர் வசித்த சத்ரபதி நகர் பகுதியிலேயே திருட்டு செய்ததாகவும் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். போலீஸ் காவலில் இருக்கும் ஆஷிஷிடம் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் சமூகத்தில் நம்பிக்கையை மீறி, உயர் கல்வியாளரும் தொழில்முனைவோரும் இந்த வகையில் குற்றப் பாதையில் சென்றது, அனைத்து பெற்றோர்களுக்கும், இளைஞர்களுக்கும் எச்சரிக்கையாக விளங்கும் சம்பவமாக உள்ளது.