
‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமலஹாசன் பேசிய கருத்துகள் தற்போது கர்நாடக மாநிலத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது” என அவர் கூறியதையடுத்து, கர்நாடக அரசியல் தலைவர்கள், பிரச்சார அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
குறிப்பாக, கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் பேனர்கள் கிழிக்கப்படும் அளவிற்கு போராட்டங்கள் நடந்துள்ளன. இதற்கிடையில், கர்நாடக அமைச்சர் சிவராஜ், கமலஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் ‘தக் லைஃப்’ படத்தை தடை செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் கமல்ஹாசனின் கருத்து சரியானது என்று சபாநாயகர் அப்பாவு கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது திராவிட குடும்பத்தின் முதல் மொழி தமிழ் எனவும் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் தமிழில் இருந்து தான் பிறந்துள்ளதாகவும் ராபர்ட் கால்டுவெல் ஆய்வு செய்து கூறியுள்ளார். கமல்ஹாசன் கருத்துக்கு ஆதாரங்கள் உள்ளது. அவரின் கருத்து சரியானது என்று தெரிவித்துள்ளார்.