
ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக் சிட்டியில் எக்சிட்டோ சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் கால் சென்டர் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த நிறுவனத்தை நடத்தி வந்தவர்கள் குஜராத் மாநிலத்தை சேர்ந்த கைவன் படேல் மற்றும் ரூபேஷ்குமார் ஆகியோர். இந்த நிறுவனத்தில் 60 பேர் பணியாற்றி வந்துள்ளனர். இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் சைபர் கிரைம் குற்ற பிரிவு காவல் துறையினருக்கு கிடைக்கப்பட்ட தகவலின் படி இந்த நிறுவனத்தில் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் இந்த நிறுவனம் மூலம் அமெரிக்காவில் உள்ள PAYPAL செயலி மூலம் வாடிக்கையாளர்களுக்கு மெயில்கள் அனுப்பி அவர்களது தகவல்களைத் திருடி வங்கிக் கணக்கில் பணம் எடுத்து வந்துள்ளது தெரியவந்தது.மேலும் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு தலா 30 பேரை தொலைபேசி மூலம் அழைத்து மோசடியில் ஈடுபட வைத்துள்ளனர்.
இதனை அடுத்து கால் சென்டர் நிறுவன உரிமையாளர்கள் உட்பட 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் பயன்படுத்தி வந்த 60க்கும் மேற்பட்ட லேப்டாப்கள், செல்போன்கள்,ID கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. போலி கால்செண்டர் நடத்தி வெளிநாட்டவர்களை ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.