கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு, கோழிக்கோடு, பத்தினம் திட்டா, வயநாடு, கண்ணூர்  உள்ளிட்ட பல மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

இதனால் அப்பகுதிகளில் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் நிலச்சரிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் கல்லட்டுபாராவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அங்கு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது ஆற்றின் குறுக்கே சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஜீப் சிக்கி உள்ளது. ஜீப்பில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகள் பயத்தில் கத்தி கூச்சலிட்டுள்ளனர்.

அச்சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருந்த ஜீப்பில் கயிறுகளை கட்டி பத்திரமாக பயணிகளை மீட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு நீடித்தது.