இஸ்ரேல்- ஈரான் நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. கடந்த 13ஆம் தேதி அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி இஸ்ரேல் ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் தாக்குதல்கள் நடத்தியது. அதற்கு ஈரானும் தொடர்ந்து பதில் தாக்குதல்கள் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவும், ஈரானுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டது. அதாவது ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய மூன்று அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதுகுறித்து வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு அதிபர் ட்ரம்ப் உரையாற்றினார்.

அதில் அவர் கூறியதாவது, ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா வெற்றி பெற்றது. ராணுவ வீரர்களுக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள சி.என்.என் மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனங்கள் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் அணு உலைகள் அழிக்கப்படவில்லை எனவும், அனைத்தும் தற்காலிக பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்தி உள்ளதாகவும், அதிலிருந்து ஈரான் சில மாதங்களில் மீண்டும் அணுத்திட்டத்தில் ஈடுபடும் எனவும் தெரிவித்துள்ளது.

அரசிற்கு எதிராக உள்நாட்டு ஊடகங்களே இதுபோன்ற செய்திகளை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோபமடைந்த டிரம்ப், தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்தப் பதிவில், அமெரிக்க வரலாற்றில் வெற்றியடைந்த ராணுவ தாக்குதல்களில் ஈரானின் தாக்குதலும் ஒன்று.

அதனை குறைத்து மதிப்பீடு செய்யும் வகையில் செய்திகளை வெளியிட சி.என்.என் மற்றும் தி நியூயார்க் டைம் செய்தி நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் அணு உலைகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது என கூறினார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, சி.என்.என் செய்தி நிறுவனத்தில் உள்ள செய்தியாளர் நட்டாஷா பெர்டிராண்டை உடனடியாக நீக்க வேண்டும். கடந்த 3 நாட்களாக லேப்டாப்பை திறந்ததும் பொய் செய்திகளை வெளியிடும் வேளையிலே ஈடுபட்டு வருகிறார்.

அணு உலைகள் பற்றி பொய்யான தகவல்களை கூறி வருகிறார். ஒரு காலத்தில் சிறந்த பத்திரிகை நிறுவனமாக செயல்பட்ட அதன் மதிப்பை இவரைப் போன்றவர்கள் அழித்து வருகின்றனர். இவர் ஒரு நேரடி ஒளிபரப்பு நிருபராக இருக்க தகுதியற்றவர். அவரை பதவியில் இருந்து ஒரு நாயைப் போல தூக்கி எறிய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.