மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் ஆட்டத்தில், ஹைதராபாத் அணி இமாலய இலக்கை துரத்திப்பிடித்து வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில், ரியான் ரிக்கெல்டன் அதிரடியாக விளையாடி 55 பந்துகளில் 123 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். மும்பை அணி 243 ரன்கள் குவித்தபோது, அந்த அணியின் உரிமையாளர்கள் நீதா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.

ஆனால், அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 244 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி, மும்பை பந்துவீச்சை துவம்சம் செய்தது. பவர்பிளேயிலேயே 92 ரன்களைக் குவித்து மும்பை ரசிகர்களை மிரள வைத்தனர்.

 

பும்ரா, டிரெண்ட் போல்ட் என அனுபவ வீரர்களின் பந்துகளும் எல்லைக்கோட்டிற்கு பறந்தன. குறிப்பாக அஸ்வனி குமார் வீசிய ஓவரில் டிராவிஸ் ஹெட் விளாசிய சிக்ஸர்களைக் கண்டு, டக்-அவுட்டில் இருந்த ரோகித் சர்மா மற்றும் அம்பானி குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

இறுதியில் ஹென்ரிச் கிளாசன் மற்றும் இளம் வீரர் சலில் அரோரா ஜோடி அதிரடியைத் தொடர, 18.4 ஓவர்களிலேயே ஹைதராபாத் அணி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.