ஹரியானாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. சுமார் 10 ஆண்டுகளாக ஹரியானாவில் ஆட்சி செய்யும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் போராடுகிறது. தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. அதுமட்டுமில்லாமல் ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி, ஆசாத் ஜமாத் கட்சி கூட்டணி அமைத்து போட்டி போட முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் பிரபல தொழிலதிபராக வலம் வந்தவர் ஓம் பிரகாஷ் ஜிண்டால். இவரது மனைவி சாவித்ரி ஜிண்டால் ஹரியானாவின் ஹிசார் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நேற்று முன்தினம் சாவித்திரி ஜிண்டால் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அரியானா மாநில அமைச்சரும் ஹிசார் தொகுதியில் தற்போதைய சிட்டிங் எம்எல்ஏவுமான கமல் குப்தாவிற்கு எதிராக சாவித்திரி போட்டியிட உள்ளார். இவரது கணவர் ஓம் பிரகாஷ் ஜிண்டால் காங்கிரஸ் சார்பாக 1991, 2000, 2005 என மூன்று முறை ஹிசார் சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் ஓம் பிரகாஷ் ஜிண்டால் உயிரிழந்தார். அவருக்கு பின்பு சாவித்திரி அரசியலுக்கு வந்தார். அப்போது நடந்த இடை தேர்தலில், 2009-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் சாவித்திரி ஹிசார் தொகுதியின் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். சாவித்திரி ஹிசார் குருசேத்திர மக்களவைத் தொகுதியின் எம்பி ஆக உள்ளார். மக்களவைத் தேர்தலில் நவீன் ஆதரவாக சாவித்திரி ஜிண்டால் பரப்பரை ஆற்றினார். ஹிசார் தொகுதியில் பாஜக வேட்பாளர் ரஞ்சித் சவுதாலாவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

சாவித்திரி சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜக தலைமை கமல் குப்தாவை மீண்டும் களமிறக்கியதால் சாவித்ரி ஜிண்டால் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். சுமார் 29.1 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு சாவித்திரியிடம் உள்ளது. நாட்டின் பணக்கார பெண்மணியாக இருப்பவர் சாவித்திரி ஜிண்டால் என போர்ப்ஸ் இந்தியா தெரிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.