
சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கம் ஹால் சாலையில் உள்ள நேர்ச்சை திருத்தல மாதா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சசிகலா வழிபாடு செய்தார். இதனை அடுத்து கருணை இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, உணவு பரிமாறினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு பணி செய்யும் பெண்களுக்கு தங்கும் விடுதி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால் திமுக பெயரை மாற்றி “தோழி” என்று பெயரிட்டுள்ளது.
இடைத்தேர்தல் அறிவிக்கப் உள்ள ஈரோட்டுக்கு மட்டும் சென்று முதல்வர் ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். ஆனால் பாதிக்கப்பட்ட மற்ற இடங்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்கள், கணினி, சைக்கிள் போன்றவை வழங்கப்பட்டன. ஆனால் இன்று சைக்கிள், லேப்டாப் போன்ற திட்டங்கள் முறையாக நடத்தப்படவில்லை. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழகத்திற்கு அனுப்பப்படுவதில்லை.
ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக திமுக ஆட்சி காலத்தில் கேரள மருத்துவ கழிவுகள், தமிழ்நாட்டின் எல்லை பகுதிகளில் கொட்டப்பட்டு வருகிறது. திமுகவின் ஆட்சி காலத்தில் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற எனது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறேன். திமுக கணக்கெல்லாம் செல்லாது, அதிமுகவின் வாக்கு வங்கி இன்றும் குறையவில்லை. “மீண்டும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி அமையும், நான் அமைப்பேன்” என்று அவர் கூறினார்.