
முன்னாள் பாலிவுட் நடிகையும் தற்போது கின்னர அகாராவின் மகாமண்டலேஷ்வரர் பதவியை வகிக்கும் மம்தா குல்கர்னி, சமீபத்தில் முஸ்லிம்கள், பாகிஸ்தான், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அரசியல் தலைவர்கள் குறித்து ஆழமான கருத்துகளை வெளியிட்டுள்ளார். பிரயாக்ராஜில் நடைபெற்ற மஹா கும்பம் நிகழ்வில் அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “முஸ்லிம்கள் எனக்கு மிகுந்த அன்பளித்துள்ளனர். பாலிவுட் காலத்தில் பாகிஸ்தானிலிருந்து தினமும் 50 கடிதங்கள் வந்தன. நான் துபாயில் இருந்த போது அமைதி மிகுந்த அனுபவம் ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் முஸ்லிம்களை நேசிக்கிறேன். ஆனால் பயங்கரவாதத்தை வெறுக்கிறேன். ஒரு பயங்கரவாதி எவருக்கும் சொந்தமானவனாக இருக்க முடியாது. அவர் எந்த மதத்தினரானாலும், அது தவறு. பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை” என அவர் வலியுறுத்தினார். துபாயில் தனது ஆன்மிக சாதனையின் போது முஸ்லிம் சமுதாயத்தினர் அளித்த ஆதரவையும் அவர் மனமுவந்துச் சுட்டிக்காட்டினார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக அவர் கருத்து வெளியிடும் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து, “உங்களுக்கு ஆதாரம் வேண்டுமா? 10 நாட்கள் பாகிஸ்தானுக்கே சென்று பாருங்கள்” என்று கூறினார். “இந்தியர்கள், நாட்டுக்காக சரியானதைதான் செய்துள்ளனர். அதை சோதிக்க வேண்டிய நிலை உங்களுக்கு இல்லை” எனத் தெரிவித்தார். இதனால் அவரது பேச்சு சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு காரணமாகியுள்ளது.
இதனுடன், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரைப் பற்றி மம்தா கூறியதாவது: “அவர் மிகவும் நல்ல மனிதர். அவரை நான் மதிக்கிறேன்” என புகழ்ந்து பேசினார். மேலும், தன்னைப் பற்றிய தவறான ஊகங்கள் வேண்டாம் என்று கூறி, “அரசியலுக்கு வருவதற்கான யோசனையும் திட்டமும் எனக்கில்லை” என்று உறுதியாக தெரிவித்தார்.
மம்தாவின் இந்த பேச்சுகள், பாகிஸ்தான், முஸ்லிம்கள், பயங்கரவாதம், மற்றும் இந்திய அரசியல் சூழலை மையமாக கொண்டு தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படும் நிலையில் உள்ளன.