
பெங்களூருவில் ரூ.40 லட்சம் ஆண்டு சம்பளமான தயாரிப்பு மேலாளர் வேலைக்கு நேர்காணலுக்குச் சென்ற வேட்பாளர் ஒருவர், மிக எளிய ஒரு கேள்விக்குத் தவறான அணுகுமுறையால் நிராகரிக்கபட்ட சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. “பெங்களூரில் ஒரு வருடத்தில் எத்தனை நாட்கள் குடையை எடுத்துச் செல்ல வேண்டும்?” என்ற கேள்வியை ஆட்சேர்ப்பு அலுவலர் கேட்டபோது, வேட்பாளர் மிகவும் கணித ரீதியான பதிலை அளித்ததாக தெரியவந்துள்ளது.
அந்த வேட்பாளர், மழை பருவம், வரலாற்று மழைப்பொழிவு அளவு, பயண நேர சூழ்நிலை போன்றவற்றைப் பார்த்து, “ஒருவருக்கு ஆண்டுக்கு 55.7 நாட்கள் குடை தேவைப்படும்” என்று 95% நம்பிக்கையுடன் கூறினார். ஆனால், இந்த பதில் அந்த அலுவலருக்கு ஏற்க முடியாததாக இருந்தது. அவர் நேரடியாக “தவறு” என தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, “பெங்களூரு என்பது கணிக்க முடியாத மழைக்கால நகரம். இங்குள்ள மக்கள் வெயிலிலும் கூட குடையை எடுத்துச் செல்கிறார்கள்.”
இந்த சம்பவத்தை LinkedIn-ல் பதிவிட்டுள்ள அந்த ஆட்சேர்ப்பு அலுவலர் சந்தீப் லோகநாத், “வேட்பாளர் திறமைமிக்கவர் என்றாலும், இந்த நகரத்தின் இயல்பைப் புரிந்துகொள்ள தவறியதால் வேலை வாய்ப்பை இழந்தார்” என கூறியுள்ளார். இப்பதிவை பலரும் ஆதரித்து, “பெங்களூரு என்பது ஒரு உணர்வு… கணிதம் மட்டும் போதாது” என தெரிவித்துள்ளனர்.
மழை நகரமான பெங்களூருவில் வேலைக்கு தேர்வு ஆக, ஒருவரின் அனுபவமும், நகர வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் திறனும் அவசியம் என்பது இச்சம்பவத்தின் மூலம் மேலும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு எளிய கேள்வியும், ஒரு பெரிய வாய்ப்பையும் தவறவைக்கக்கூடியது என்பதே இதன் போதனையாகும்.