ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலம் ஆகும். அதனை அவமதிப்பது போல தற்போது தனியார் நிறுவனம் ஒன்று கோவிலின் தேவஸ்தான தொலைக்காட்சிகளில் வரும் சில காட்சிகளை அனிமேஷன் வீடியோக்களாகவும், திருப்பதியில் ஒளிபரப்பப்படும் பக்தி பாடல்களையும் பயன்படுத்தி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை உள்ளிட்டவைகளை 3d அனிமேஷன் செய்து வீடியோ கேமாக தயாரித்துள்ளது.

அந்த அனிமேஷன் வீடியோ கேம் தொகுப்பு தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு பக்தர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதாவது இது போன்ற வீடியோக்கள் கோவிலின் புனிதத்தை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த வீடியோ தொகுப்பு திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, அந்த தனியார் வீடியோ கேம் நிறுவனத்தின் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் அளித்த புகாரில், ஏழுமலையான் கோவில் வடிவமைப்பை பயன்படுத்தி 3டி அனிமேஷன் செய்த வீடியோ கேம் முழுவதையும் ஆன்லைனில் இருந்து நீக்க வேண்டும் என தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.