தமிழ்நாடு அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையுடன், தமிழ் முதுகலைப் பட்டப்படிப்பு (M.A. Tamil) படிக்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் தமிழக அரசு, மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டம், 2 ஆண்டுகள் தமிழ் M.A. பட்டம் மற்றும் Ph.D. முனைவர் பட்ட வகுப்புகளுக்கான சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, 2025-26 கல்வியாண்டுக்கான ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் தேர்வின் அடிப்படையில் 15 மாணவர்களுக்கு திங்கள்தோறும் ரூ.2000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். பயில விரும்பும் மாணவர்கள், சேர்க்கை தொடர்பான தகவல்களையும், விண்ணப்பத்தையும் www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

இருபாலருக்கும் தனித்தனி கட்டணமில்லா விடுதி வசதி வழங்கப்படுகிறது. ஆனால், விடுதி அறைகள் முந்தியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, கல்விச் சான்றிதழ்களின் நகலுடன் இணைத்து, 27.06.2025 வெள்ளிக்கிழமைக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் (அ) அஞ்சல் மூலம் அனுப்பலாம்:

இயக்குநர் (கூ.பொ.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113.
தகவலுக்கு தொலைபேசி எண்: 044-22542992.