
மத்திய அரசு தற்போது ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஒரு முடிவை எடுத்துள்ளது. அதாவது நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மாறாக ஒருங்கிணைந்த ஓய்வுதிய திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதில் 25 ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு முழு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 2025 முதல் செயல்பாட்டுக்கு வரும் இந்த திட்டத்தால் 23 லட்சம் மத்திய ஊழியர்கள் பயன் பெறுவார்கள். அந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ரூ 10,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
அதோடு பணியில் இருக்கும் போது ஊழியர்கள் இறந்து விட்டால் அவர்களின் மனைவிக்கு 60 % ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் தனது முடிவை மாநில அரசும் செயல்படுத்தலாம் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால் பணியாளர்கள் முழு பயனையும் அடைவார். ஒரு ஊழியர் 25 ஆண்டுகள் பணி செய்து இருந்தால் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களில் சராசரி சம்பளத்தில் குறைந்தபட்சம் 50 % ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.
ஒரு வேளை இந்த ஓய்வூதியம் பெறுபவர் இறந்துவிட்டால் அவர் இறக்கும் போது பெறப்படும் ஓய்வூதியத்தில் 60% அவரது குடும்பத்தினருக்கு கிடைக்கும். இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் அனைத்து என்பிஎஸ் மக்களும் யூபிஎஸ் க்கு செல்ல விருப்பம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
என்பிஎஸ் தொடங்கியதில் இருந்து ஓய்வு பெற்ற அல்லது ஓய்வு பெற உள்ள அனைவருக்கும் இது பொருந்தும் வகையில் உள்ளது என்றும், இதற்கான நிலுவைத் தொகை அரசால் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் காங்கிரஸ் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை குறித்து பேசும்போது சொந்த தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக கூறியுள்ளது.