
பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இருவரும் தனித்தனியாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இன்று தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி பூம்புகாரில் பாமகவின் மகளிர் மாநாடு நடைபெறும். இந்த மாநாட்டிற்கு அன்புமணி உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
46 ஆண்டுகளாக பாமகவை நான்தான் இயக்கி வருகிறேன். என் பின்புலத்தில் இருந்து யாரும் இயக்கவில்லை. என்னை யாரும் இயக்க முடியாது. கும்முடிபூண்டி முதல் குமரி வரை 46 ஆண்டுகளாக பயணித்துள்ளேன். பாமகவுக்கு நிர்வாகிகள் சிலர் வருவாங்க சிலர் போவாங்க பாமக பொருளாளர் பதவியில் சிறுபான்மையினரை நியமிக்கவே திலகபாமாவை நீக்கினேன்.
தந்தை மகன் பிணக்கால் நிர்வாகிகளிடம் எந்த குழப்பமும் இல்லை. ஒவ்வொரு கட்சியிலும் குடும்பத்திலும் நடப்பதுதான் பாமகவிலும் நடக்கிறது. நாங்களே இதை பெரிதுபடுத்தவில்லை. பாமக நிர்வாகிகள் நியமனம் நீக்கம் விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம்.
சுதந்திரமாக செயல்படுவது அன்புமணியின் உரிமை எனக் கூறினார். இதனையடுத்து பாமகவின் நிர்வாகிகளை தலைவர் பொறுப்பில் உள்ள தன்னால்தான் நீக்க முடியும் என அன்புமணி கூறியிருந்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராமதாஸ் சட்ட விதிகளை இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு நாளை சொல்கிறேன் என கூறியுள்ளார்.
பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கமா? என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு வியாழக்கிழமை தெரிவிப்பதாக ராமதாஸ் கூறியுள்ளார்.