கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது கவிழ்ந்தது. நாகராஜ் என்பவரது மனைவி மகாராணி(55), செல்வராஜ் என்பவரது மனைவி கிருத்திகா (35) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பல்லடம் நால்ரோடு பகுதியில் நூல் பண்டல்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி ஓட்டுனர் பொறுப்பற்ற முறையில் வாகனத்தை திருப்பியதால் லாரி சாலையோரமாக நின்ற பெண்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சராக ஸ்டாலின் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 3 லட்ச ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.