தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இன்று காலை பேரவை மண்டபத்திற்கு வருகை தந்த ஆளுநரை தலைவர் அப்பாவு வரவேற்றார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். தமிழ் தாய் வாழ்த்து இசைக்கபட்டவுடன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பதால் ஆளுநர் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும் இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. தனது அரசியல் சட்டக் கடமைகளை செய்யவே மனம் இல்லாதவர் அந்த பதவியில் ஏன் ஒட்டி கொண்டிருக்க வேண்டும் என்பதை அனைவரும் மனதிலும் கேள்வி. தமிழ்நாட்டு மக்களையும், அரசையும், சட்டப்பேரவையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என முதலமைச்சர் கூறியுள்ளார்.