கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை பகுதியில் ஆயிஷா பீவி என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழராமன் புதூரில் வசிக்கும் ஒப்பந்ததாரரிடம் வீடு கட்டி தருமாறு கேட்டு 18 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். அந்த பணத்தில் ஒப்பந்ததாரர் ஒரு தளத்தை மட்டுமே கட்டிக் கொடுத்து வேறு எந்த வேலையையும் செய்யவில்லை. மேலும் கட்டப்பட்ட வீட்டின் எல்லா பகுதிகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆயிஷா ஒரு நிபுணரை கொண்டு ஆய்வு செய்து அறிக்கை பெற்றதில் ஒப்பந்ததாரர் கூடுதலாக 3 லட்சத்து 97 ஆயிரத்து 226 ரூபாய் பணத்தை வாங்கியது தெரியவந்தது. இது தொடர்பாக குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் ஒப்பந்ததாரரின் பணியில் இருக்கும் குறைபாட்டை சுட்டிக்காட்டி அதிகமாக பெற்ற 3 லட்ச ரூபாய் பணம், அபராதமாக 25 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு தொகை 5 ஆயிரம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.