மத்திய அரசிடம் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் அரியானா எல்லைகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதில் பஞ்சாப் விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால்(75) காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வந்தது.

இருப்பினும் எந்தவித சிகிச்சையும் மேற்கொள்ளாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் தலையிட்டு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இருப்பினும் அவர் மருத்துவ சிகிச்சைகளை மறுத்து தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

இதனிடையே உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளையும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தல்லேவாலையும் மத்திய குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து தல்லேவால் மருத்துவ சிகிச்சைகளை ஏற்க ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது இருப்பினும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என தல்லேவால் திட்டவட்டமாக கூறினார்.

இந்நிலையில் இன்று தண்ணீர் அருந்தி தல்லேவால் விரதத்தை முடித்துள்ளார் என பஞ்சாப் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நீதிபதி சூர்யாகாந்த் மற்றும் நீதிபதி என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் நடைபெற்றது. இதில் பஞ்சாப் மாநில வழக்கறிஞர் ஜெனரல் குர்மிந்தர் சிங் கூறியதாவது, “தல்லேவால் இன்று தண்ணீரை அருந்தி தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்” என கூறினார்.

இதை வரவேற்ற நீதிபதிகள் அவரின் முயற்சிகளை பாராட்டினர். மேலும் பஞ்சாப் மற்றும் அரியானா மாநில அரசுக்கு போராட்ட இடத்தில் நிலவும் நிலைமை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விவசாயிகள் குறைகளை கவனிக்க குழு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். பாட்டியாலா சிறையில் இருந்து 245 விவசாயிகள் கொண்ட கடைசி குழு இன்று அதிகாலையில் விடுவிக்கப்பட்டதை அடுத்தே தல்லேவால் தண்ணீர் குடித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.