ஹைதராபாத்தில் தெலுங்கு திரைப்பட உலகில் நாட்டுப்புறக் குரலால் புகழ்பெற்ற பாடகி மங்லியின் பிறந்தநாள் விழா, தற்போது பெரும் சர்ச்சைக்கு ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த  செவ்வாய்க்கிழமை இரவு செவெல்லா பகுதியில் உள்ள திரிபுரா ரிசார்ட்டில் மங்லியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நண்பர்கள் மற்றும் தொழில்துறை பிரபலர்கள் கலந்து கொண்டனர்.

அந்த விழாவில் போதைப்பொருள் பயன்படுத்த படுவதாக  கொடுக்கப்பட்ட  தகவல்களை அடிப்படையாகக் கொண்டு போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையின் போது, ஏராளமான வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், விழாவில் பங்கேற்றவர்களில் சிலரிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், போதைப்பொருள் சாப்பிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாடகி மீது செவெல்லா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தெலுங்கானா பாரம்பரிய பாடல்களால் புகழ்பெற்ற மங்லி, பத்துக்கும்மா, போனாலு, சிவராத்திரி போன்ற பாடல்களால் மக்கள் மனதில் தனித்த இடம் பிடித்தவர்.  தொடர்ந்து தெலுங்கு  திரைப்பட பாடல்களில் வெற்றி பெற்ற மங்லி, “ஊ சொல்றியா மாமா” என்ற தெலுங்கு பாடலில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

தற்போது நிகழ்ச்சிகள், நிகழ்வுகள் என பல பிஸியான இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும் அவர் ‘தக் லைஃப்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஜிங்குச்சா’ பாடலை தெலுங்கில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இத்தகைய ஓர் இசை பயணத்தில் இருக்கும் பாடகி மங்லியின் பிறந்தநாள் விழா பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான புகார்கள் திரையுலகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல ஆண்டுகளாக கலாச்சார பாடல்களால் மக்களை கவர்ந்தவர், இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.