பீகார் மாநிலத்தில் “மிஸஸ் பீகார் 2025” அழகிப்போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் 21 வயது முதல் 55 வயது வரையிலான திருமணமான பெண்கள், விவாகரத்தான பெண்கள், விதவைகள் மற்றும் குழந்தைகள் உள்ள இல்லாத பெண்கள் என அனைவருமே பங்கேற்கலாம்.

அந்தப் போட்டி பீகார் பெண்களின் அழகு புத்திசாலித்தனத்தை வெளிக் கொண்டு வர நடத்தப்படுகிறது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்தப் போட்டியில் பாஜக கட்சியின் எம்.எல்.ஏ விஷால் பிரசாந்தின் மனைவி ஐஸ்வர்யா ராஜ் கலந்து கொண்டு “மிஸஸ் பீகார் 2025” பட்டத்தை வென்றுள்ளார்.

இதுகுறித்து ஐஸ்வர்யா ராஜ் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “கனவுகள் நனவாகி விட்டன-உங்கள் பெண் இப்போது மிஸஸ் பிகார் 2025!” என பதிவிட்டுள்ளார். மேலும் தன்னை நம்பிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

மேலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜ் கூறியதாவது, மாடலிங் மற்றும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் இருந்த போதிலும் திருமணத்திற்கு பிறகு தனது கனவுகளை ஒதுக்கி வைத்ததாகவும், தற்போது தனது கணவரின் ஆதரவுடன் மீண்டும் களம் இறங்கி உள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.