
தெலுங்கானா ஹைதராபாத்தில் உள்ள பழைய நகரத்தில் கும்பல் ஒன்று சமூக வலைதளம் துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்தனர். அதில் குலி குதுக் மைதானத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று வழுக்கை தலையில் முடி வளர வைக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கு தலையில் மொட்டை அடித்துக் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் டெல்லியை சேர்ந்த சல்மான் டெல்லி வாலா தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் காலை அந்த மைதானத்திற்கு சென்றனர். விளம்பரத்தை கண்டு ஆண்கள் பெண்கள் என 1000 பேர் மைதானத்தில் குவிந்தனர். இதனால் ஆண்கள் பெண்களுக்கு என்று தனித்தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டது. சிகிச்சைக்காக வந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் மொட்டை அடித்துக் கொண்டு வரிசையில் காத்திருந்தனர்.
அவர்களிடம் பதிவு கட்டணமாக ரூ. 700, எண்ணெய் கட்டணமாக ரூ. 600 வாங்கப்பட்டது. சிகிச்சைக்காக வந்தவர்கள் அவர்களது தலையில் ஒரு விதமான எண்ணெய்யை தடவி விட்டனர். இந்த எண்ணெய்யை 15 நாட்களுக்கு ஒரு முறை என மூன்று மாதங்கள் தடவினால் அடர்த்தியான முடி வளரும் என்று கூறினர். இதனை நம்பி பணத்தை கட்டிய பொதுமக்கள் தலையில் எண்ணெய் தடவி சென்றனர்.
சிகிச்சை முடிந்ததும் சல்மான் குழுவினர் அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். ஏற்கனவே இந்த குழுவினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உப்பலில் இதே போன்று விளம்பரம் செய்து பொதுமக்களிடம் பணத்தை வசூலித்து ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் புகார் செய்து சம்பவ இடத்திற்கு சென்றனர். அதற்குள் அந்த கும்பல் தலைமறைவாகிவிட்டது.