
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்த நிலையில், அது குறித்து அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது, மதுரையில் முதலமைச்சர் வருகைக்காக கிட்டத்தட்ட 3 மணி நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பொதுக்குழு முடிவடைந்த நிலையில் பேனர்கள், பாதுகாப்பு கட்டமைப்புகள் இதுவரை அகற்றப்படவில்லை. மதுரையை காப்பாற்றுவதாக திமுக நினைக்கலாம். ஆனால் அதனை மதுரை மக்கள் விரும்பவில்லை.
உண்மையில் அவர்களது ஆட்சியை விரும்பியிருந்தால் கூட்டம் இன்னொரு சித்திரை திருவிழாவாக மாறியிருக்கும். இதுவரை அனைவரும் அறிந்த ஒரு சுவாரசியம் திமுகவிற்கு உள்ளது. அதாவது மதுரையில் பொதுக்குழு நடத்தினால் அடுத்த முறை ஆட்சிக்கு வராத சுவாரஸ்யம்.
திமுக கட்சியில் தலைவர் எம்ஜிஆர் இருந்தவரை மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடத்திய பிறகு ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் அவர் கட்சியை விட்டு வெளியே வந்த பிறகு கருணாநிதி மதுரையில் பொதுக்குழு நடத்திய போது ஆட்சிக்கு வந்ததில்லை. மதுரையில் திமுக வின் பொதுக்குழு எப்பொழுதெல்லாம் கூடுகிறதோ அப்போதெல்லாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சியை பிடிக்கவில்லை.
கடைசியாக 1977-ல் பொதுக்குழுவுக்குப் பிறகு 12 ஆண்டுகள் திமுக ஆட்சிக்கு வரவில்லை. இதனை அடுத்து தற்போது பொதுக்குழு கூட்டம் நடைபெற்று உள்ளது. அதனால் திமுக தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்டது என கூறியுள்ளார்.