நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளியை சிறப்பாக கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். ஏராளமான மக்கள் புத்தாடைகள் மற்றும் தேவையான பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கி வருகிறார்கள். தீபாவளி தினத்தன்று அசைவ உணவுகளை சமைக்க ஏராளமான பொதுமக்கள் ஆடு மற்றும் கோழி உள்ளிட்ட உணவுகளை அதிக அளவில் வாங்கி சமைப்பது வழக்கம். இதனால் தற்போது முதலில் வியாபாரிகள் தீபாவளி பண்டிகை வியாபாரத்தை தொடங்கி உள்ளனர்.

அதன்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரபல ஆட்டு சந்தைகளில் ஒன்றான பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தையில் வியாபாரம் களை கட்டியது. இந்த சந்தையில் தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஏராளமான வியாபாரிகள் வந்து ஆடுகளை போட்டி போட்டுக்கொண்டு விற்பனைக்காக வாங்கி சென்றனர். நான்காயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விலை போன நிலையில் ஆட்டு சந்தையில் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.