மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சேர்ந்த 64 வயதான பெண் ஒருவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கூறி டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது கடந்த ஜூன் 5ஆம் தேதி அந்தப் பெண்ணிற்கு செல்போனில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதனை எடுத்து பேசிய போது எதிர் முனையில் மர்ம நபர் ஒருவர் டெல்லியில் இருந்து பேசுவதாகவும், தான் ஒரு பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல் அதிகாரி எனவும் கூறியுள்ளார்.

மேலும் நீங்கள் பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பதாகவும், இந்தியா குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் கூறி மிரட்டியுள்ளார்.

இதனை அடுத்து இது தொடர்பான வழக்கில் தங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 50 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் எனக் கூறி ஏமாற்றியுள்ளார்.

இதனை நம்பிய அந்தப் பெண் மர்ம நபரின் மிரட்டலுக்கு பயந்து வெவ்வேறு வங்கி கணக்குகளில் 5 நாட்கள் இடைவெளியில் ரூபாய் 22,40,000 அனுப்பி வைத்துள்ளார்.

அதன் பின் அந்த நபரிடம் இருந்து எந்த ஒரு அழைப்பும் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மும்பை சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது