சென்னை ஈவெரா நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் திமுக சட்ட துறையின் 3வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். திராவிடவியல் அமர்வில் திராவிட இயக்கம் குறித்த கருத்தரங்கம், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, திமுக சட்டத்துறை 3வது மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்துகின்றேன். மோடி அரசால் அரசியல் சட்டத்திற்கு ஆபத்து வந்துள்ளது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோசியலிசம் போன்ற அரசியலின் அடிப்படைச் சட்டத்தை தகர்க்க மோடி அரசு முயற்சி செய்கிறது. கூட்டாட்சி தத்துவம், மதச்சார்பின்மையை சீர்குலைக்க பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டு வர முயற்சி செய்கிறது.

அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தை இந்தியா கூட்டணி உயர்த்தி பிடித்து வருகிறது, அரசியல் சட்டத்தின் மாண்பை உயர்த்தி பிடிக்க திமுக சட்டத்துறை மாநாட்டின் கருத்தரங்கு கலந்துரையாடல் நடக்கிறது என்று கூறினார். இந்த மாநாட்டில் தமிழகம், புதுச்சேரியில் இருந்து 10,000 மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர் என். ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.