அமெரிக்க அரசு கொண்டுவந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக அதிபர் டிரம்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டினர். முக்கியமாக டிரம்ப் அரசு கொண்டு வந்துள்ள பிக் பியூட்டிபுல் பில் எனப்படும் வரிக்குறைப்பு மசோதாவை எலான் மஸ்க் விமர்சித்தார். இதையடுத்து மஸ்க்-க்கு எதிராக அவரது நிறுவனத்துக்கு அரசு மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாக டிரம்ப் கூறினார்.

இதையடுத்து சிறுமிகள் பாலியல் வன்கொடுமை நெட்வொர்க் தொடர்புடைய சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளின் ட்ரம்பின் பெயர் இருந்ததாகவும், அதனால்தான் விசாரணையின் விவரங்களும் கண்டுபிடிப்புகளும் வெளியாகவில்லை என்று எலான் மஸ்க் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த டிரம்ப், எலான் சுயநிலையை இழந்துவிட்டார். அவரிடம் என்னால் பேச முடியாது என்று தெரிவித்தார். இந்த மோதல் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குறித்து நான் தெரிவித்த கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது கடந்த வாரம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறித்த எனது சில பதிவுகள் அளவு மீறி சென்று விட்டது. அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.