
ஆவடி கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்த டில்லிராஜ் (29) என்பவர், ஆன்லைனில் கார் ஓட்டுநர் வேலைவாய்ப்பு பற்றிய விளம்பரத்தை பார்த்து, பிரசாந்த் என்பவரிடம் பேசி, அவரது ‘மாருதி வேகனார்’ காரை வாடகைக்கு எடுத்துள்ளார். கடந்த ஓராண்டாக அந்த காரை சென்னை முழுவதும் ஓட்டி வந்த டில்லிராஜ், பிரசாந்துக்கு எதுவும் தெரிவிக்காமல் காரை கோயம்பேடில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து விட்டார்.
மேலும், இரு மாதங்களாக கார் வாடகை பணத்தை செலுத்தாமல், பிரசாந்தை ஏமாற்றி வந்தார். இதனால் சந்தேகமடைந்த பிரசாந்த், டில்லிராஜின் வீட்டிற்கு சென்று, அவரது தாய் யமுனாவிடம் விவரங்களை கேட்டார். பின்னர், டில்லிராஜை ஆவடி ரயில் நிலையத்தில் பிடித்து, ‘மாருதி ஸ்விப்ட் டிசையர்’ காரில் வேலுார் நோக்கி கடத்தி சென்றார்.
யமுனா 1.20 லட்ச ரூபாய் கொடுத்து காரை மீட்க என்ற போது கார் சவாரியில் இருப்பதாகவும், 14ம் தேதி தான் திருப்பி கொடுக்க முடியும் எனவும் நிதி நிறுவனத்தினர் தெரிவித்தனர். இதனை பிரசாந்திடம் தெரிவித்த போது, அவர் “காரை திருப்பி கொடுத்தால் தான் மகனை விடுவிக்க முடியும்” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, யமுனா அவசர எண் ‘100’க்கு அழைத்து புகார் தெரிவித்தார். தகவலறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், பிரசாந்த்திடம் மொபைல் மூலம் பேசி, இருவரையும் காட்பாடி, திருவலம் காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். அங்கு டில்லிராஜை மீட்ட போலீசார், பிரசாந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.