டெல்லியில் வருகிற பிப்ரவரி 5ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ஆம் ஆத்மி கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது. கெஜ்ரிவால், ராகுல் காந்தி ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் பாஜக தனது அண்டை மாநிலமான உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை டெல்லியில் களத்தில் இறக்கியுள்ளார். இந்நிலையில் தனது பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ஒரு முதலமைச்சராக நானும் எனது அமைச்சர்களும் மகா கும்பமேளா திரிவேணில் நீராட முடிந்தது.

அதேபோன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை நான் கேட்கின்றேன். அவர் தனது அமைச்சர்கள் உடன் யமுனையில் சென்று குளிக்க முடியுமா? என்று சவால் விடுத்தார். அவர் புனிதமான யமுனையை அழுக்கு வாய்க்காலாக மாற்றி பாவம் செய்துள்ளார் என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில் கெஜ்ரிவாலுக்கு சவால் விடுத்த யோகி ஆதித்யநாத்துக்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் வலை பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது, மற்றவர்களுக்கு சவால் விடுபவர்கள் தங்கள் மாநிலத்தில் உள்ள மதுரா வழியாக பாயும் யமுனை நீரை குடிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே டெல்லியில் உள்ள யமுனை ஏற்பட்டுள்ள கடுமையான மாசுபாடு காரணமாக அதை சுத்தம் செய்து பாதுகாக்க வேண்டும் என்ற குரல்கள் வலுப்பெற்று வருகிறது. முன்னதாக கெஜ்ரிவால் யமுனையை சுத்தம் செய்யவும், நதிகளின் சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுக்கவும் பல வாக்குறுதிகளை அளித்ததும் குறிப்பிடத்தக்கது.