தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் 30 கவுன்சிலர்கள் உள்ளனர். திமுக 8, அதிமுக 12, மதிமுக 2, காங்கிரஸ் 1, எஸ் டி பி ஐ 1 சுயேச்சைகள் 5 பேர் உள்ளனர். கடந்த முறை திமுக, அதிமுக இரு வேட்பாளர்களும் தலா 15 ஓட்டுக்கள் பெற்றதால் உமா மகேஸ்வரி குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு நகராட்சி தலைவியாக தேர்வானார்.

கடந்த 3 ஆண்டுகளில் உமா மகேஸ்வரி முறையாக கூட்டங்கள் நடத்தவில்லை, திட்டங்களை செயல்படுத்தவில்லை என்று திமுக கவுன்சிலர்கள் குறை கூறினர். ஏற்கனவே அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இரண்டாவது முறையாக கடந்த ஜூன் 2-ம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கோரிக்கை விடுத்தனர்.

நேற்று நகராட்சியில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் உமா மகேஸ்வரி பங்கேற்கவில்லை. மற்ற 29 கவுன்சிலர்களின் 28 பேர் அவருக்கு எதிராக ஓட்டளித்தனர். இதனால் அவர் பதவி பறிபோனது. திமுக கவுன்சிலர் விஜயகுமார் மட்டும்தான் அவருக்கு ஆதரவாக ஓட்டளித்திருந்தார்.