
சேலம் மாவட்டத்தில் உள்ள கருமந்துறை மலைவாழ் கிராமத்தில் ராஜேஸ்வரி என்ற மாணவி வசித்து வருகிறார். இவரது தந்தை உடல் நலக்குறைவின் காரணமாக கடந்த 2023 ஆம் ஆண்டு உயிரிழந்துவிட்ட நிலையில் அதன் பிறகு தன்னுடைய தாய் மற்றும் அக்கா சகோதரர் ஆகியோருடன் அங்கு வாழ்ந்து வருகிறார்.
இதில் மாணவி ராஜேஸ்வரி சிறு வயது முதலே படிப்பில் மிகவும் கெட்டிக்காரியாக இருந்துள்ளார். இந்த மாணவி பத்தாம் வகுப்பில் 438 மதிப்பெண்களும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 521 மதிப்பெண்களும் எடுத்திருந்தார்.
இந்த மாணவி ஜேஇஇ நுழைவு தேர்வு எழுதி இருந்த நிலையில் அந்த தேர்வில் அகில இந்திய அளவில் 417வது இடம் பிடித்து ஐஐடி மெட்ராஸில் படிக்க தேர்வாகியுள்ளார். இந்த மாணவி ஐஐடியில் Aerospace engineering பாடப்பிரிவில் படிக்க விருப்பம் பெற்றுள்ள நிலையில் ஐஐடியில் தேர்ச்சி பெற்ற முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்நிலையில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இறுதி கட்ட கல்வி விருது விழா நடைபெறும் நிலையில் நடிகர் விஜய் மாணவி ராஜேஸ்வரியின் கல்வி செலவுக்காக 2 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். மேலும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்று வரும் நிலையில் தற்போது பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு நடிகர் விஜய் இரண்டு லட்ச ரூபாய் ஊக்க தொகை கொடுத்து உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
இதே போன்று முன்னதாக இந்த மாணவிக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று 70 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினி மற்றும் 5.79 லட்சம் மதிப்பில் சொந்த வீடு கட்டுவதற்கு நிதி போன்றவற்றை ஒதுக்கினார். அதோடு மாணவியின் கல்வி செலவையும் ஏற்பதாக ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.