சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள  அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இரும்பின் தொன்மை நூல் வெளியீடுதல் மற்றும் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டு விழா தொடங்கிவிட்டது. இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி தமிழ் நிலப் பரப்பிலிருந்து தான் இரும்புக்காலம் தொடங்கியதாக முதல்வர் தற்போது அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு தொழில் நுட்பம் தமிழ் நிலத்திலிருந்து அறிமுகமானது நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு அண்மைக்கால அகழாய்வு முடிவுகள் வாயிலாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவில் இரும்புத் தாதுவில் இருந்து இரும்பினைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் தமிழ்நிலப்பரப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது!

5300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவியல் அடிப்படையில் நிறுவியுள்ளோம்.

இது தமிழுக்கும் – தமிழினத்துக்கும் – தமிழ்நாட்டுக்கும் – தமிழ் நிலத்துக்கும் பெருமை.

உலக மானுட இனத்துக்கு தமிழ்நிலம் வழங்கும் மாபெரும் கொடை என்றே இதனை நாம் கம்பீரமாகச் சொல்லலாம்.

இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்பட வேண்டும். அதனை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ச்சியாகச் செய்து வருகிறது”

தமிழ்நாட்டில் நகர நாகரிகமும் எழுத்தறிவும் கி.மு. 6 நூற்றாண்டில் தொடங்கியது என்பதை கீழடி அகழாய்வு முடிவுகள் நிறுவியுள்ளன.

பொருநை ஆற்றங்கரையில் 3200 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண் பயிர்தொழிலில் நெல்பயிரிடப்பட்டுள்ளது என்பதை சிவகளை அகழாய்வு முடிவுவெளிப்படுத்தியது.

தமிழ்நாட்டின் இரும்பின் அறிமுகம் 4200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்வின் மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தின்வாயிலாக நான் உலகிற்கு அறிவித்தேன்.

தமிழ் – தமிழ் நிலம் – தமிழ்நாடு குறித்து நாம் இதுவரை சொல்லி வந்தவை ஏதோ இலக்கியப் புனைவுகள் அல்ல, அரசியலுக்காகச் சொன்னவை அல்ல, வரலாற்று ஆதாரங்கள்!

உலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை என்பதை மெய்ப்பிக்க வேண்டிய கடமையை இந்த திராவிட மாடல் அரசு எடுத்துக் கொள்கிறது என்று கூறினார்.