பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ராமதாஸ் வீட்டிற்கு நேற்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் இன்று கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. தற்போது 4-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ராமதாஸின் கடுமையான விமர்சனங்களை அடுத்து பனையூர் இல்லத்தில் நிர்வாகிகளுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அன்புமணிக்கு பக்குவமோ தலைமை பண்பு இல்லை வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது என ராமதாஸ் கடுமையாக விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில் ராமதாஸ் அன்புமணி இடையிலான மோதல் அதிகரித்துள்ள நிலையில் இருவரும் இணையவில்லை என்றால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என சேலம் மேற்கு பாமக எம்எல்ஏ அருள் அறிவித்துள்ளார்.

சமரசம் குறித்து இருவரிடமும் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கட்சியை கட்டுப்பாட்டில் கொண்டு வர அன்புமணி தீவிரமாக களமிறங்கியுள்ள நிலையில் அருள் பதவியை ராஜினாமா செய்வேன் என அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.