
மகாராஷ்டிராவில் பள்ளிகளில் ஹிந்தியை கட்டாய மூன்றாவது மொழியாக்கும் திட்டம் தொடர்பான இரு அரசாணைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் தேவேந்திர பட்நவீஸ் அறிவித்துள்ளார். இந்த முடிவு, மாநில அமைச்சரவை கூட்டத்தில் 2025 ஜூன் 29ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, தேசிய கல்விக் கொள்கையின் கீழ் ஏப்ரல் 16 மற்றும் ஜூன் 17ஆம் தேதிகளில் வெளியிடப்பட்ட அரசாணைகள் இரண்டும் உடனடியாக ரத்து செய்யப்படுகின்றன. இந்த இரண்டு அரசாணைகளும், பள்ளிகளில் மூன்றாவது மொழியாக ஹிந்தியை கட்டாயமாக்கும் வகையில் இருந்தன. இந்த தீர்மானம் எதிர்ப்புகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்திய நிலையில், தற்போது அரசு தற்காலிகமாக அதனை வாபஸ் பெற்றுள்ளது.
Mumbai, Maharashtra: Chief Minister Devendra Fadnavis says, “Today in the Cabinet meeting, we discussed the three-language policy. We have decided that a committee will be formed under the leadership of Dr. Narendra Jadhav to determine from which standard the languages should be… pic.twitter.com/vamyX5CNEX
— IANS (@ians_india) June 29, 2025
“>
முதல்வர் தெரிவித்ததாவது, “மூன்று மொழி கொள்கை தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கொள்கை எப்போது, எந்த வகுப்பில் இருந்து அமல்படுத்தப்பட வேண்டும்? எப்படி செயல்படுத்த வேண்டும்? மாணவர்களுக்கு எந்த மொழித் தேர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்பதனை ஆராய, கல்வியாளர் டாக்டர் நரேந்திர ஜாதவ் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.
இந்த ஆய்வுக்குழு தனது பரிந்துரைகளை அரசிற்கு வழங்கும். அதன் பின்னரே அரசு மூன்று மொழிக் கொள்கையை மேற்கொண்டு நடைமுறைப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. அதுவரை, முன்னதாக வெளியிடப்பட்ட இரு அரசாணைகளும் செல்லாது எனத் தங்கள் முடிவைத் தெரிவித்தார். இந்த நடவடிக்கை, மொழி தேர்வில் மாணவர்களுக்கு விருப்பத்தேர்வை அளிக்க வேண்டும் எனும் கோரிக்கையை கருத்தில் கொண்டதாகக் கூறப்படுகிறது.