
ஐபிஎல் 18 வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப்பை வீழ்த்தி சுமார் 18 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்றது. இதற்கான வெற்றி கொண்டாட்டம் நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த போது கிரிக்கெட் வீரர்களை வரவேற்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றம் தாமாக வந்து இந்த வழக்கை விசாரிப்பதாக அறிவித்தது.
இந்த வழக்கினை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், விசாரணை நடத்த தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என மாநில அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
“விதான் சவுதா மற்றும் சின்னச்சாமி மைதானம் என ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகளை நடத்தியது ஏன்? அரசு சார்பில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?” ஆகிய கேள்விகளுக்கு விரிவான பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு வரும் 10-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.