நடிகர் ரவி மோகன் படத்தில் நடிப்பதாக கூறிவிட்டு 6 கோடி முன் பணம் வாங்கிவிட்டு திருப்பி தராததால் அந்த பணத்தை திருப்பி தர வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாபி டச் கோல்ட் யுனிவர்சல் என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் எங்கள் நிறுவனம் தொடர்பாக இரண்டு படங்களில் நடிகர் ரவிமோகன் ஒப்புக்கொண்டு விட்டு 15 கோடி சம்பளம் பேசி அதில் 6 கோடியை முன் பணமாக பெற்றுக் கொண்டார்.
அந்த பணத்தை அவர் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்திற்காக பயன்படுத்தி விட்டார். எனவே அவர் தயாரிக்கும் ப்ரோ கோட் படத்திற்கும், ரவி மோகன் வேறு எந்த படத்திலும் நடிக்க தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது நடிகர் ரவி மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் படத்திற்காக 80 நாட்கள் கால் சீட் கொடுத்த போதிலும் அவர்கள் படப்பிடிப்பை ஆரம்பிக்கவில்லை. எனவே அவர்கள் தரப்பில் பத்து கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜூலை 23ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்த நிலையில் தற்போது நடிகர் ரவி மோகன் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த தயாரிப்பு நிறுவனத்தின் மீது ரூ.9 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என கூறி நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் படத்தில் நடிப்பதற்காக வாங்கிய முன்பணத்தை திரும்பி செலுத்தாத வழக்கில் சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
சுமார் 5.9 கோடி மதிப்பில் ஆன சொத்து ஆவணங்களை 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என நடிகர் ரவி மோகனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த தயாரிப்பு நிறுவனத்துடன் ஆன பிரச்சனையை தீர்த்துக்கொள்ள ஒரு மத்தியஸ்தரை நியமித்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
